முத்தரையர்களுக்கு முன்னுரிமை தரும் கட்சிகளுடன் கூட்டணி-முத்தரையர் பேரவை அறிவிப்பு
தஞ்சை: முத்தரையர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைக்கப் போவதாக முத்தரையர் பேரவை அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் முத்தரையர் பேரவையின் மாநாடு நடந்தது. இதற்கு மாநிலத் தலைவர் ஆர்.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஆர். விஸ்வநாதனின் மகன் நடிகர் பரதன் பேசியதாவது,
சாதி வாரி கணக்கெடுப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்த சோனியா காந்திக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், திருச்சி வந்த தமிழக துணை முதல்வர் முக.ஸ்டாலினிடம் முத்தரையர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் சேர்க்க வேண்டும் என்று பேரவையின் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தோம்.
எங்களது கோரிக்கையை ஏற்று திருச்சி விழாவில் மு.க. ஸ்டாலின் பேசும் போது, இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். அதற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் முத்தரையர் இனத்திற்கு தனி இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றிற்கு எந்தக் கட்சி முக்கியத்துவம் அளிக்கிறதோ அந்தக் கட்சியுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றார் அவர்.