இந்தியக் கடல் பகுதியில் தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படை!
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரிடம் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாவது தொடர்கதையாகிவிட்டது.
நேற்று நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் கடும் தாக்குதல் நடத்தினர்.
இலங்கை கடற்படையினர் தாக்குதல் மற்றும் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்திய அரசின் நிலைப்பாடு போன்றவற்றை கவனத்தில் கொண்டு, ராமேசுவரத்தில் இருந்து நடுக்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் எண்ணிக்கையே குறைந்துவிட்டது.
இப்போதெல்லாம் குறைந்த அளவிலான படகுகளே கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றன.
நேற்று முன்தினம்சில படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இந்த படகுகள் அனைத்தும் நேற்று வழக்கம் போல் கரை திரும்பிக்கொண்டிருந்தன.
இந்தியக் கடல் பகுதியில் தாக்குதல்...
அப்போது தங்கச்சி மடத்தை சேர்ந்த படகில் அதன் உரிமையாளர் காலின் (வயது 28), மீனவர்கள் சந்தியா (22), ஹச்சூரியன் (30), பார்த்திபன் (24) ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடித்து விட்டு இந்திய கடல் பகுதிக்குள் வந்த போது திடீரென இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் வந்து துப்பாக்கியை காண்பித்து படகை நிறுத்துமாறு கூறினர்.
ஆனால் மீனவர்களோ தாங்கள் இந்திய கடல் எல்லைக்குள்தானே உள்ளோம் என்று படகை நிறுத்தாமல் வேகமாக இயக்கினர். இதனால் இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி கற்களை வீசி தாக்கினர். மேலும் இந்திய கடல் எல்லைக்குள் வந்து படகை மறித்து தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் படகுக்குள் இறங்கி அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இரால் மீன்கள், ஜி.பி.எஸ். கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் படகின் உரிமையாளர் காலினை அடித்தனர். இதில் அவருக்கு முகத்திலும், கையிலும் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விடுவோம் என்று கூறி மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோல் நேற்று கச்சத்தீவு அருகே 50-க்கும் மேற்பட்ட படகுகளையும் இலங்கை கடற்படையினர் தாக்கினார்களாம். இதுபற்றிய தகவல் அறிந்த கியூபிரிவு போலீசார், தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
"இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து பலமுறை அரசிடம் புகார் தெரிவித்தும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை", என்று குமுறுகின்றனர் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்.