8 கோடி மக்களைத்தான் நம்பியுள்ளோம்-சரத் குமார்
தூத்துக்குடி: வறுமை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற சிந்தித்து வருகிறோம். அதற்காக தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களைத்தான் நம்பியுள்ளோம் என்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் முப்பெரும் விழாவில் அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, கட்சியின் 4-வது ஆண்டு துவக்க விழா, சரத்குமார் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவி்ல் நலத்திட்ட உதவிகளை வழங்கி சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் சரத்குமார் பேசியதாவது,
தூத்துக்குடி உப்பளம் நிறைந்த ஊர். உப்பிட்டவரை உயிருள்ளவரை நினை என்று சொல்வார்கள். அது போல நான் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
சமத்துவ மக்கள் கட்சி வெற்றிப் பாதையை நோக்கிச் செல்கிறது. காமராஜர் தான் படிக்காவி்ட்டாலும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். சீரிய கல்விச் சேவையை செய்தவர்.
காமராஜரின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டதுதான் சமத்துவ மக்கள் கட்சி. 31.08.2007ல் இந்த கட்சியை துவங்கியபோது பலர் ஏளனம் செய்தனர். தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் சமக. துவக்கத்தில் பல கொள்கைகளை அறிவித்த கட்சிகள் இன்று கொள்கைகளே இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், பெற்ற வாக்குகள் அதிகம். மக்கள் எங்களை உற்று நோக்கி வருகின்றனர். எங்களது கொள்கைகள், தீர்மானங்கள் எல்லாம்தான் தமிழகத்தில் சட்டமாகி வரும் நிலை உள்ளது. வெற்றி என்பது மெதுவாகத்தான் கிடைக்கும்.
காமராஜர் அமைத்து தந்த அஸ்திவாரத்தில் இந்த கட்சி செயல்பட்டு வருகிறது. அவரது பண்புகளை பின்பற்றி நடக்கிறது. தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கின்ற நேரம் இது. 8 கோடி மக்களை மட்டுமே நாங்கள் நம்பியுள்ளோம்.
தமிழகத்தை வறுமை இல்லாத மாநிலமாக மாற்ற சிந்தித்து வருகிறோம். எங்கள் கட்சியால் தமிழகத்தில் நல்ல ஆட்சி உருவாக்கப்பட்டது என்ற நிலை வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications