தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளமே முக்கியம்-கார்த்தி சிதம்பரம்
சென்னை: இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தில் ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் எனக்கு உள்ளது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி கூறினார்.
சென்னையில் நடந்த சிதம்பரத்தின் 65வது பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்துப் பேசுவதில்லை. அவர்கள் எல்லை தாண்டி பேசினால் ஒன்று நதி நீர் பிரச்சனை பற்றி பேசுவார்கள் அல்லது இலங்கைப் பிரச்சனை குறித்து பேசுவார்கள்.
காஷ்மீர் பிரச்னை, பொருளாதார தாராளமயமாக்கல், உலக வங்கி பற்றியெல்லாம் திராவிடக் கட்சிகள் பேசுவதில்லை.
தமிழர்களுக்கு தேசியமும் மிக அவசியம் தேவை. தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளமே முக்கியம். ஏனெனில் இந்தியா செழித்தால் தான் தமிழகம் செழிக்கும்.
இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தில் ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் எனக்கு உள்ளது என்றார்.
சிதம்பரத்தால் தமிழகத்துக்கே பெருமை-தங்கபாலு:
விழாவில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சிதம்பரத்தால் தமிழகத்துக்கே பெருமை. கடந்த 35 ஆண்டுகளாக ப.சிதம்பரத்தின் நல்ல நண்பனாக இருந்து வருகிறேன். தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முதன்முதலாக அவரது பெயரை முன்மொழிந்தவன் நான் தான்.
தனது உறவினர்கள் ஜவுளித் தொழிலில் இருப்பதால் தனக்கு ஜவுளித் துறைக்குப் பதிலாக வேறு துறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்ட பண்பாளர் தான் சிதம்பரம்.
நிதியமைச்சராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியவர். உள்துறை அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருபவர். விவசாயக் கடன் தள்ளுபடி, உயர் கல்விக்கு கடன் ஆகியவை அவரது சாதனைகளில் சில.
தமிழகத்தில் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை நமது நாடு முழுவதும் விரிவுபடுத்தியதில் முக்கிய பங்கு வகித்த சிதம்பரம், தன்னடக்கம் மிகுந்தவர்.
மிக ஒழுக்கமானவர், மென்மையானவர், உறுதியானவர் என்றார் தங்கபாலு.