தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினரையும் அக். 8ம் தேதி தூக்கிலிட உத்தரவு
இதற்கான வாரண்ட்டை வேலூர் சிறைக்கு சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ராகவன் அனுப்பியுள்ளார்.
கடந்த 2000மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா தண்டனை வழங்கி சென்னை தனி கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழகத்தில் வன்முறை வெடித்தது. தர்மபுரி அருகே நடந்த போராட்டத்தின்போது கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் வந்த பஸ்சை அதிமுகவினர் தீவைத்துக் கொளுத்தினர்.
இதில், கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மாணவிகள் உயிரோடு எரிந்து பலியானார்கள். இந்த கோரச் சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மாது, நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், மற்ற 25 பேருக்கு சிறை தண்டனையும்அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து அனைவரும் உச்சநீதிதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தனர். அதில் அனைவரது தண்டனைகளையும் உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, இந்த வழக்கை விசாரித்த சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் அக்டோபர் 8ம் தேதி தூக்கிலிட நீதிபதி ராகவன் உத்தரவிட்டுள்ளார்.