ஜெ.வுக்கு தொடர் கொலை மிரட்டல்-மதுரை திமுக பிரமுகரிடம் தீவிர விசாரணை
மதுரை : அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் முத்துப்பாண்டியனிடம் சென்னை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி
வருகின்றனர்.
15 பேர் கொண்ட சென்னை போலீஸ் படையினர் கரிமேடு காவல் நிலையத்தில் வைத்து முத்துப்பாண்டியனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
ஜெயலலிதா மதுரை வரக் கூடாது. மீறி வந்தால் கொடூரமாக கொலை செய்யப்படுவார். அண்ணனை அவர் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று மிரட்டி நான்கு கடிதங்கள் வந்துள்ளன. இதுகுறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர், டிஜிபி, போலீஸ் கமிஷனர் என அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது போக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் இரண்டுமுறை பார்த்து அதிமுக எம்.பிக்கள் புகார் கூறியுள்ளனர். சிபிஐ விசாரணைக்கும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசும் விசாரித்து வருவதாக தெரிகிறது.
விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து திமுக அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இன்றுமதுரைக்கு 15 பேர் கொண்ட கிண்டி காவல் நிலையப் போலீஸார் வந்தனர். கரிமேடு காவல் நிலையத்திற்கு திமுக வட்டச் செயலாளர் முத்துப்பாண்டியனை வரவழைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்து எழுதப்பட்ட இரு கடிதங்களில் வைகைப் புயல் பாலு, முத்துப்பாண்டியன் என பெயர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. முத்துப்பாண்டியனிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரைக் கைது செய்வது குறித்து போலீஸார் தீர்மானிப்பார்கள் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே முத்துப்பாண்டியன் மதுரை போலீஸ் ஆணையரிடம் ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில், மதுரை அதிமுக பிரமுகரும், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளருமான பசும்பொன் பாண்டியனுக்கும் எனக்கும் முன் விரோதம் இருக்கிறது.
திமுகவில் இருந்த நாங்கள் இருவரும் நன்றாக பழகி வந்தோம். இந்நிலையில் அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த போது என்னையும் அழைத்தார். நான் வரமுடியாது என்று கூறிவிட்டேன். கடைசி வரை திமுகவில்தான் இருப்பேன் என்று கூறினேன்.
இதனால் ஆத்திரம் அடைந்த பசும்பொன் பாண்டியன், ' உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன். உனக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுத்துக்கொண்டே இருப்பேன்" என்று சவால் விட்டார்.
அவர்தான் இப்போது என் பெயரை தவறாகப்பயன்படுத்தி நான் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளதாக பழிவாங்குகிறார். எனக்கு எழுதப்படிக்கவே தெரியாது. அப்படி இருக்கும்போது நான் எப்படி இந்த மிரட்டல் கடிதத்தை எழுதியிருக்க முடியும்?
இந்த விவகாரத்தால் என் மனசு ரொம்ப வேதனைப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் எனக் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications