காமன்வெல்த் போட்டிகளின்போது லஷ்கர் இ தொய்பா தாக்கலாம்-அமெரிக்கா எச்சரிக்கை
இதுகுறித்து அமெரிக்க தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் இயக்குநர் மைக்கேல் லீட்டர் கூறுகையில், டெல்லி காமன்வெல்த் போட்டியை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் குறி வைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்தப் போட்டிகள் இந்தியாவுக்கு மிக முக்கியமானவை என்பதால் அதை சீர்குலைக்க லஷ்கர் முயலலாம்.
நாளுக்கு நாள் இந்த தாக்குதல் அபாயத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே இந்தியா மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
இதை இந்திய அரசும் ஊகித்தே உள்ளது. இதனால்தான் எந்த வகையான தாக்குதலையும் சமாளிக்கக் கூடிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.
காமன்வெல்த் போட்டிக்கு மட்டும் 80,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் போக 17,500 புற ராணுவப் படையினர், 3000 கமாண்டோக்கள், 100 சதி முறியடிப்புப் படையினரும் டெல்லியில் குவிக்கப்படுகின்றனர்.
லீட்டர் தொடர்ந்து கூறுகையில், காஷ்மீரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் லஷ்கர் இயக்கம் தனது ஆதிக்கத்தை ஏற்கனவே பலமுறை நிலைநாட்டியுள்ளது. இது டெல்லி காமன்வெல்த் போட்டியிலும் எதிரொலிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.
தெற்காசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய மிரட்டலாக உருவெடுத்துள்ளது லஷ்கர் இ தொய்பா என்றார் லீட்டர்.