பாகனை அடித்துக் கொன்ற பசியால் வாடிய சர்க்கஸ் யானை!
உடுமலைப்பேட்டை: பசியால் வாடிய சர்க்கஸ் யானை எதிரே பிஸ்கெட் சாப்பிட்ட பாகனை யானை அடித்து கொன்றது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ராஜ்கமல் சர்க்கஸ் நிறுவனம் 4 லாரிகளில் 4 யானைகளை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலிக்கு வந்தனர். லாரிகளில் கனி (55) உள்பட 4 யானை பாகன்கள் உடன் வந்தனர்.
யானைகளுக்கு வழியில் உணவு தராமல் அழைத்து வந்ததால் அவை பசியில் இருந்தன.
இந் நிலையில் லாரிகளை உடுமலைப்பேட்டை அருகே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பாகன்கள் டீ குடித்தனர். பின்னர் யானைகள் எதிரே பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.
பாகன் கனி, 40 வயதான பெண் யானை இருந்த லாரியில் ஏறினார். அப்போது பசியில் இருந்த அந்த யானை கனியை தும்பிக்கையால் தூக்கி சுழற்றி வீசியது. இதில் அவர் படுகாயமடைந்து மயங்கினார்.
இதையடுத்து அவரை மற்ற பாகன்கள் அவரை உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
பாகன் கனி அந்த பெண் யானையை கடந்த 20 ஆண்டுகளாக பராமரித்து வந்தவராம். அவர் என்ன சாப்பிட்டாலும் அந்த யானைக்கும் கொடுப்பாராம்.
யானை பசியில் இருப்பதை அறியாமல் அதன் கண் எதிரில் பிஸ்கெட் சாப்பிட்டதால் அது கோபத்தில் இருந்துள்ளது. பிஸ்கெட் சாப்பிட்டப்படியே அவர் லாரியில் ஏறியதும் அவரை தாக்கி கொன்றுள்ளது.
இப்போது கனியை கொன்ற யானையின் கண்களில் இருந்தும் நீர் வழிந்து கொண்டுள்ளது. பாகனை கொன்று விட்ட வேதனையில் கண்ணீர் விட்டுக் கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து அனைத்து யானைகளும் திரும்ப கேரளாவுக்கே அனுப்பப்பட்டுவிட்டன.