Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருத்துவ உயர் கல்வி பொது நுழைவுத்தேர்வு: ஜெ. பொய் பிரச்சாரம்-தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

Tamilnadu Logo
சென்னை: மருத்துவம் மற்றும் மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் இடஒதுக்கீட்டை பாதுகாக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை மறைத்தும், திரித்தும் வெளிவந்துள்ள சிலரின் (ஜெயலலிதா) அறிக்கைகள், உள்நோக்கம் கொண்ட பொய்ப் பிரச்சாரமே அன்றி உண்மையல்ல என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறி்க்கையில், மருத்துவம் மற்றும் மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றும்,

சமூக நீதிக்கு எதிரான இந்த முடிவை மத்திய அரசில் திமுகவும் அங்கம் வகிக்கிறது. ஆனால், அதை மத்திய அரசிடம் எதிர்க்காமல், உச்ச நீதிமன்றம் சென்று தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் மூலமாக அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போன்ற செயலாகும் என்றும்,

69 விழுக்காடு இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கருணாநிதிக்கு இல்லை, அது இருந்திருந்தால், பொது நுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை மாற்ற முயற்சி எடுத்திருக்க வேண்டும். அல்லது மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றிருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

மருத்துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும்,

பொது நுழைவுத் தேர்வு முறையை அறவே நீக்க வேண்டுமென்றும் தமிழக முதல்வர் கருணாநிதி, கடந்த 15.08.2010 அன்று பிரதமருக்கும், மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றி, 2007-2008 முதல் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என்று தெரிவித்து,

இந்த முறை தொடரப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக முதல்வ தெரிவித்துள்ளார்.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், தமிழக அரசு தன்னையும் ஒரு வாதியாக 19-8-2010 அன்று இணைத்துக் கொண்டுள்ளது.

இந்த வழக்கு 17.09.2010 அன்று விசாரணைக்கு வந்தபோதும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஆஜராகி, பொது நுழைவுத் தேர்வுகள் முறைக்கு தமிழக அரசின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி 18.09.2010 நாளிட்ட நாளேடுகளில் வெளிவந்துள்ளது. இவைகளை எல்லாம் படிக்காமல் எப்பொழுதும் போல் தமிழக அரசை குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள சிலர் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த வழக்கு 17-9-2010 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் இதனை எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுபோன்று மற்ற மாநிலங்களும் இதனை எதிர்க்கலாம் என்றும், எனவே மத்திய அரசு இவ்விஷயத்தில் முடிவு எடுக்கும் முன்னர் அனைத்து மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பின்னர், அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் மாநில அரசுகளுடனும், மற்ற சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் விரிவாக ஆலோசனை செய்த பிறகே மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வை நடைமுறைப்படுத்தினாலும், தமிழ்நாடு மருத்துவ மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மத்திய அரசின் இந்த முடிவையும் தமிழக அரசு எதிர்க்கிறது.

அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் நலன்களைப் பாதிக்கும் என்பதால் இந்த அரசு தொடர்ந்து மத்திய அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றுள்ளது.

இந்திய மருத்துவக் குழுமத்தின் ஆளுநர்கள் குழு 29.08.2010 அன்று கூட்டிய கூட்டத்தில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் கலந்து கொண்டு, இந்திய மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ள மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகள் மற்றும் மருத்துவப் படிப்பு முடிந்து வெளியேறும் மாணவர்களுக்குப் பரிந்துரைத்துள்ள வெளித் தேர்வு ஆகியவற்றிற்குத் தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் 30.08.2010 அன்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மையக் குழுமக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கலந்து கொண்டு, அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாது, மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல் எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள 27-8-2010 நாளிட்ட கடிதத்தில், இந்திய மருத்துவக் குழுமம் பரிந்துரைத்துள்ள மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு எல்லா மாநிலங்களுடனும், மருத்துவக் கல்வியாளர்களுடனும் கலந்து விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு மாநிலங்களின் கல்வி முறையை நிர்வகிப்பதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது.

மத்திய அரசோ அல்லது இந்திய மருத்துவக் குழுமமோ தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை முறையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் இருப்பதற்கு தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழக அரசு மாணவர்கள் நலனுக்காக எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளை மறைத்தும், திரித்தும் வெளிவந்துள்ள சிலரின் அறிக்கை உள்நோக்கம் கொண்ட பொய்ப் பிரச்சாரமே அன்றி, உண்மையல்ல என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+