ஒரே வாரத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 110 பேர் பலி: நாடு முழுவதும் 2,427 பேர் பலி
டெல்லி: நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 110 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது இந்தியாவில் பரவுவது 2வது முறையாகும். இரண்டாம் தடவை பரவும் பன்றிக் காய்ச்சல் வைரசுக்கு வீரியம் அதிகம். அதைக் கட்டுப்படுத்துவதும் கடினம் என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருகின்றனர். இதில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 110 பேர் பலியாகியுள்ளனர். செப்டம்பர் 19-ம் தேதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் மகாராஷ்டிராவில் 42 பேரும், குஜராத்தில் 29 பேரும், மத்திய பிரதேசத்தில் 14 பேரும், டெல்லியில் 10 பேரும், உத்தர பிரதேசத்தில் 3 பேரும், ஹரியானா, ஆந்திரா, கேரளா, உத்தரகண்ட், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் பன்றிக் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,427. இதுவரையில் அரசு மற்றும் தனியார் ரத்தப் பரிசோதனை நிலையங்களில் 1,83,027 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்ததில் 43,283 பேருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு 12 பேர் இதுவரை இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications