வேலூரில் பன்றிக் காய்ச்சலுக்கு 2 பேர் பலி-மேலும் 7 பேருக்குப் பாதிப்பு
வேலூர்: வேலூரில் 2 பேர் பன்றிக் காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது 2வது முறையாக பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த முறையை விட இந்த முறை படு தீவிரமாக உள்ளது. சென்னை, கோவை, கன்னியாகுமரி, வேலூர் மாவட்டங்களில்தான் இது தீவிரமாக உள்ளது. இதுவரை 12 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்துள்ளனர்.
வேலூரில் 2 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை, வேலூர் அருகே உள்ள தங்கக் கோவில் மற்றும் தனியார் பல்கலைக்கழகம் போன்ற இடங்களுக்கு பெருமளவிலான மக்கள் வருவதால், அங்கு தற்போது வேகமாக பன்றிக் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.
வேலூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முதல் வரை 21 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.இதில், திருவண்ணாமலைமாவட்டம் போளூரைச் சேர்ந்த புனிதா (19), குடியாத்தத்ததை சேர்ந்த லட்சுமி (40) ஆகியோர் பன்றிக் காய்ச்சல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் கடந்த மாதம் 3,000க்கும் மேற்பட்டவர்கள் பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்காக வந்தனர்.
இதில், நோய் அறிகுறி இருந்த 320 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்பது மாதத்தில் ஒன்பது பேர் பன்றிக் காய்சலால் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதில், நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சரவணன். இவர் வேலூரில் தனியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வந்தார். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடையநல்லூரில் போய் மரணமடைந்தார்.