கூடன்குளம் அணு மின் நிலையத்தில் மார்ச் முதல் மின் உற்பத்தி
நெல்லை: கூடங்குளத்தில் வரும் மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணுசக்தி கழகத் தலைவர் எஸ்.கே. ஜெயின் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் ரூ.14 ஆயிரம் கோடி செலவில் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணுமின் உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான பணிகளை பார்வையிட வந்த இந்திய அணுசக்தி கழகத் தலைவர் எஸ்.கே.ஜெயின் நிருபர்களிடம் கூறியதாவது,
கூடங்குளத்தில் முதல் அணு உலைக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன. இந்த அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி வருகிற டிசம்பர் மாதம் தொடங்கும். வரும் மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கப்படும். 2-வது அணு உலையின் கட்டுமானப் பணிகள் 95 சதவிகிதம் முடிந்து விட்டது.
முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்கிய 6, 7 மாதங்களில் இரண்டாவது அணு உலையிலும் மின் உற்பத்தி தொடங்கப்படும். கூடங்குளத்தில் 3, 4 அணு உலைகள் அமைப்பதற்காக இந்தியா-ரஷ்யா இடையே இறுதி கட்ட ஆலோசனை நடந்து வருகிறது.
வரும் டிசம்பர் மாதம் இந்த அணு உலைகள் அமைப்பதற்கான அடிப்படை பணிகள் தொடங்கப்படும். அடுத்த ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
12-வது ஐந்தாண்டு திட்டத்தில் மேலும் 10 அணு உலைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட உள்ளன. இதில் கூடங்குளத்தில் 5, 6 அணு உலைகளும், ரஷ்யாவுடன் இணைந்து 4 அணு உலைகளும், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இணைந்து தலா 2 அணு உலைகளும் அமைககப்படும். இதற்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது.
இதற்காக தேசிய அனல் மின் கழகம், இந்தியன் ஆயில், இந்திய அலுமினிய நிறுவனம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். 2020-ம் ஆண்டில் அணுமின் நிலையங்கள் மூலம் மின்சார உற்பத்தி 20 ஆயிரம் மெகா வாட்டை எட்டும். அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.