காங்கிரசுடன் கூட்டணி சேரும் கட்சியே வெல்லும்-தங்கபாலு
புதுக்கோட்டை: வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி சேரும் கட்சியே வெற்றிபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் முறைப்படி இணையும் விழா திருச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடக்கவுள்ளது
இந் நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் நடந்தது.
இக் கூட்டத்துக்கு முன் நிருபர்களிடம் தங்கபாலு பேசுகையில்,
வரும் 9ம் தேதி திருச்சியில் காங்கிரசின் 125வது ஆண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தலைவர் சோனியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைகிறார்.
மத்திய அரசின் வளர்ச்சி திட்டப் பணிகள் தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு நிலவரம் மிகச் சிறப்பாக உள்ளது.
தற்போது காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து சோனியா- ராகுல் காந்தி ஆகியோர் அறிவிப்பார்கள்.
வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி சேரும் கட்சியே வெற்றிபெறும். எனக்கு சோனியா உயிர் நாடியாகவும், ராகுல் உயிர் மூச்சாகவும் விளங்கி வருகின்றனர் என்றார் தங்கபாலு.
அப்போது திருநாவுக்கரசரும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications