பெண் குழந்தைகளை கொன்ற தாய், மகளுக்கு இரட்டை ஆயுள்: தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி: இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொன்ற தாய், மகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரி சிலோன் காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி தேனிலா. இவர்களுடைய மகள் ரேவதி. இவரை அதே பகுதியைச் சேர்ந்த துரைபாண்டி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி பிரவசத்திற்காக ரேவதியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
8-வது மாதத்தில் குழந்தைகள் பிறந்ததால் தாய்பால் கொடுக்கும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் மருத்துதவமனை 2-வது மாடியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள இங்குபேட்டரில் வைத்து குழந்தைகள் பராமரிக்கப்பட்டன. ஒரே நேரத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால் அதை வளர்க்க முடியாது என்பதால் கொலை செய்யத் தாயும், மகளும் முடிவு செய்தனர். கடந்த 8-ம் தேதி காலை ரேவதி, அவரது தாய் தேனிலா ஆகியோர் குழந்தைகளுக்கு பால் கொடுக்கச் சென்றனர்.
பின்னர் குழந்தைகளை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்துச் சென்று ஒரு குழந்தையை பிளேடால் அறுத்தும், மற்றொரு குழந்தையை கழுத்தை நெறித்தும் கொலை செய்துவிட்டு குழந்தைகளை மீண்டும் சிகிச்சைப் பிரிவில் கொண்டு போய் வைத்தனர்.
பின்னர் குழந்தையை யாரோ கொலை செய்து வி்ட்டதாக இருவரும் ஆடிய நாடகம் போலீசார் விசாரணையில் அம்பலமானது. தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரேவதியையும், தேனிலாவையும் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் எண் 2-ல் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணவள்ளி, ரேவதி, தேனிலாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் திருவாண்டி ஆஜரானார். போலீசார் தாய், மகள் இருவரையும் திருச்சி சிறைக்கு கொண்டு சென்றனர். ரேவதி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.