நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தியர் மீது ஆஸி.யில் தாக்குதல்
மெல்போர்ன்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. 21 வயதான இந்திய மாணவரை ஒரு டீன் ஏஜ் ஆஸ்திரேலியக் கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது.
நீ இந்தியன்தானே என்று கேட்டு அவரை பேஸ்பால் மட்டையால் அடித்துள்ளனர். மெல்போர்னின், சான்டவுன் ரயில்வே நிலையத்திற்கு அருகே நடந்து வந்து கொண்டிருந்த அந்த இந்தியரை வழிமறித்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அந்த இந்தியரை பின்னாலிருந்து தாக்கியதில் நிலை குலைந்து கீழே விழுந்தார். இதைப் பார்த்து அங்கிருந்த இருவர் ஓடி வந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தன்னைத் தாக்கியவர்களுக்கு 15 முதல் 16 வயது இருக்கும் என்று அந்த இந்தியர் கூறியுள்ளார். தாக்கப்பட்ட இந்தியர் குறித்த விவரங்களைப் போலீஸார் வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஏராளமான இந்தியர்கள் தாக்கப்பட்டனர். சிலர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சில மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் இந்தியர் மீது தாக்குதல் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications