பணி மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்!
கூடலூர்: ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமணன் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கூடலூரை அடுத்துள்ள தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் லட்சுமணன். இதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆடியபாதம்.
முதுநிலைப்பட்டதாரி ஆசிரியரான ஆடியபாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகக்கூறப்படுகின்றது.
மலைப்பகுதியில் பணிபுரிவது தனது உடல்நலத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் தெரிவித்ததாகக் கூறி, கரூர் அருகில் உள்ள தனது சொந்த ஊருக்கு இடமாற்ற உத்தரவு கேட்டு ஆடியாதம் அதற்கான உத்தரவையும் பெற்றுவிட்டார்.
ஆனால் தேவாலா அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தலைமை ஆசிரியர் அவரை அனுப்பாமல் காலம் கடத்தி வந்தார்.
மாற்று ஆசிரியர் வந்தால் தான் ஆடியபாதத்தை அனுப்ப முடியும் என தலைமை ஆசிரியர் லட்சுமணன் தெரிவித்து வந்தார்.
ஆசிரியர் இடமாற்றத்தால் பள்ளிக்கு பாதிப்பு இல்லை என தலைமை ஆசிரியர் லட்சுமணன் சான்று அளித்தால் தான் மாற்ற முடியும். இதனால், தனக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் என்று தலைமை ஆசிரியர் லட்சுமணன் கேட்டதாகக் கூறப்படுகின்றது. இதற்கிடையே தலைமை ஆசிரியருக்கு ஆசிரியர் ஆடியபாதம் ரூ. 6 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்டதோடு, இந்த தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாராக பதிவு செய்தார்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் லட்சுமணனிடம், ஆடியபாதம் ரூ. 6 ஆயிரத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தலைமை ஆசிரியரை கையும், களவுமாகப் பிடித்தனர்.
லஞ்ச வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் லட்சுமணன் சென்னையில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications