கரூரில் தங்கபாலு முன்னிலையில் காங். மோதல்-சட்டை கிழிப்பு, மண்டை உடைப்பு
கரூர்: கரூரில் நடந்த காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் தங்கபாலு முன்னிலையில் கோஷ்டிப் பூசல் வெடித்தது. இரு தரப்பினர் கடுமையாக அடித்துக் கொண்டனர். சட்டைகள் கிழிக்கப்பட்டது. ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதைத் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் தங்கபாலு.
சோனியா காந்தி அக்டோபர் 9ம் தேதி திருச்சி வருகிறார். அங்கு நடக்கும் காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா, திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா, பொதுக் கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து கரூரில் நேற்று மாவட்ட காங்கிரஸாரின் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் தங்கபாலு கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற, தாந்தோணி வட்டார காங்கிரஸ் துணை தலைவர் வீரமலை எழுந்து இங்கு உள்ள போஸ்டர்களில் ஏன் ஜி.கே.வாசன், ஜி.கே.மூப்பனார் படங்கள் வைக்கவில்லை என்று பிரச்சினை எழுப்பினார். இதையடுத்து அவருக்கும், தங்கபாலு கோஷ்டியினருக்கும் இடையே மோதல் மூண்டது.
அடுத்த சில நிமிடங்களில் இரு தரப்பினரும் அட்டாக்கில் இறங்கினர். தெருவில் நடக்கும் சண்டை போல சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் வீரமலை நையப் புடைக்கப்பட்டார். இதனால் அவரது தலையில் காயமேற்பட்டு ரத்தம் கொட்டியது. சட்டை கிழிந்து, மண்டை உடைந்து படு மோசமான நிலையில் காணப்பட்டார் வீரமலை.
இந்த சண்டையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கபாலு, அடிதடி வேண்டாம் என்று கோரியும் சண்டை நின்றபாடில்லை. இதனால் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தார் தங்கபாலு.
இதையடுத்து போலீஸாரை வரவழைத்து அமைதிப்படுத்த கோரினார் தங்கபாலு. போலீஸார் விரைந்து வந்து வீரமலையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சண்டை போட்டவர்களையும் வெளியே அனுப்பினர்.
வெளியே வந்தவர்களில் ஒரு பிரிவினர் உழவர் சந்தை முன்பு சாலை மறியலில் குதித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சண்டை குறித்து தங்கபாலு கூறுகையில், தற்போது தேவையற்ற செயல் நடந்து உள்ளது. இது வருத்தம் அளிக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் இனிமேல் இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்சிக்கு உள்ளே பேச வேண்டியதை உள்ளே பேச வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது. தனி நபர் கூட்டணி பற்றி பேசக்கூடாது. கூட்டணி பற்றி நானே (தங்கபாலு) பேசக்கூடாது.
அந்த முடிவு சோனியா காந்திக்கு மட்டும் தான் உண்டு. எனவே இனிமேல் கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேச மாட்டார்கள் என்று நம்புகிறேன். கூட்டணி பற்றி சென்னையில் குலாம்நபி ஆசாத் கூறியது, சோனியாகாந்தியின் கருத்தாகும் என்றார்.












Click it and Unblock the Notifications