என்.எல்.சி. தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற 1,000 ஒப்பந்த தொழிலாளர்கள் கைது
வேலைக்கு ஏற்ற ஊதியம், பணி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 19-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, பேராட்டம் நடத்தும் தொழிலாளர்களுடன் என்.எல்.சி. நிர்வாகம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால் இறுதி முடிவு ஏற்படவில்லை.
இந்த நிலையில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மந்தாரக் குப்பத்தில் இருந்து பேரணியாகச் சென்று நிலக்கரி சுரங்கத்தின் 2-வது வாயிலை முற்றுகையிட முயன்றனர். தகவல் அறிந்த போலீசார் அவர்களை உடனே கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தொ.மு.ச, பாட்டாளி தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 7 சங்கங்களைச் சேர்ந்தோர் நேற்று மாலை நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து என்.எல்.சி தலைமை அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக நெய்வேலியில் நிலக்கிரி வெட்டும் பணி மற்றும் மின் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.