உச்ச நீதிமன்ற உத்தரவு: அரசு, பாஜக, முஸ்லீம் வக்பு வாரியம், இந்து மகாசபா வரவேற்பு
டெல்லி: அயோத்தி தீர்ப்பை வெளியிடலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளதற்கு மத்திய அரசு, பாஜக, சன்னி முஸ்லீம் வக்பு வாரியம், அகில இந்திய இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், இந்த உத்தரவை வரவேற்கிறோம். இது குழப்பத்தை தீர்ப்பதாக உள்ளது. தெளிவாக உள்ளது. முதிர்ச்சியான தீர்ப்பு இது.
இந்த சட்டக் குழப்பம் நீடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. எந்தப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு ஏற்படுவதையே அரசு விரும்புகிறது. அதற்கான சாத்தியக் கூறுகளை நாங்கள் ஒருபோதும் எதிர்த்ததில்லை. அந்த வகையில் இந்தப் பிரச்சனைக்கும் சுமூகமான தீர்வு ஏற்பட்டால் முதலில் மகிழ்ச்சி அடைவது மத்திய அரசுதான்.
இருப்பினும் அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்கவுள்ளது. அதை அனைத்துத் தரப்பினரும் அமைதியுடன் வரவேற்று சட்ட முறைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
நமது மக்கள் மிகுந்த முதிர்ச்சி உடையவர்கள். எனவே தீர்ப்பை எந்தவிதப் பிரச்சனையுமின்றி வரவேற்பார்கள் என நம்புகிறோம்.
தீர்ப்பு வரட்டும். அதில் அதிருப்தி அடைபவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுக முடியும் என்றார் மொய்லி.
பாஜகவும் வரவேற்பு:
அதே போல உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வரவேற்றுள்ளன.
பாஜக செய்தித் தொடர்பாளரும், அயோத்தி வழக்கில் ஒரு மனுதாரரான பாபா தரம்தாஸின் வக்கீலுமான ரவி சங்கர் பிரசாத் கூறுகையில்,
இந்த தீர்ப்பை முழுமையாக வரவேற்கிறோம். இதன் மூலம் நீதி பரிபாலனத்திற்கு வழி ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். எந்த வகையான தீர்ப்பாக இருந்தாலும் உரியவர்கள் அதை தலைவணங்கி ஏற்க வேண்டும் என்றார்.
அதேபோல சன்னி முஸ்லீம் வக்பு வாரியம், அகில இந்திய இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகளும் உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications