கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு கல்தா
கரூர்: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட கரூர் சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீசன் இளைஞர் காங்கிரசிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா அறிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அடுத்த மாதம் 9-ம் தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளார்.
இதனை முன்னிட்டு, கரூரில் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காவேரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கலந்து கொண்டார்.
அப்போது தாந்தோனி வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் வீரமலை பேசியதாவது, ஜி.கே. மூப்பனார், ஜி.கே. வாசன் படங்கள் போடாமல் போஸ்டர் மற்றும் பேனர் வைப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். இதனால் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்பிரமணி தரப்பு ஆட்கள் சிலர் அவரை மேடையில் இருந்து வெளியேற்ற முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு நடந்தது. மேலும் அது கைகலப்பில் முடிந்தது. இதில் வீரமலை பலத்த காயம் அடைந்தார்.
இந்த நிலையில் கரூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீசன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளருமான கிரண்குமார் ரெட்டியின் அறிவுறுத்தலின் பேரில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட கரூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீசன் இளைஞர் காங்கிரசிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications