விழுப்புரம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு அடி உதை
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு அடி உதை விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை அடுத்த நந்திவாடி பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன். விவசாயி. இவர் அரசு வீடு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இதற்கு காரணம் நந்திவாடி பஞ்சாயத்து தலைவர் சீத்தாராமன் தான் என கருதிய வீரப்பன், இது குறித்து பஞ்சாயத்து தலைவரிடம் சென்று விவரம் கேட்டார்.
அப்போது வீரப்பனுக்கும், நந்திவாடி பஞ்சாயத்து தலைவர் சீத்தாராமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் வீரப்பன் கடும் ஆத்திரம் அடைந்து தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு வந்து பஞ்சாயத்து தலைவர் சீத்தாராமனை கத்தி, இரும்பு பைப், உருட்டுக் கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகின்றது.இதில் படுகாயம் அடைந்த பஞ்சாய்தது தலைவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து நந்திவாடி பஞ்சாயத்து தலைவர் சீத்தாராமன் அளித்த புகாரின் பேரில் வீரப்பன், அவரது மனைவி முனியம்மாள், நடேசன் உள்ளிட்ட 10 பேர் மீது கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.