கேரளாவில் போலி மாணிக்க கல் விற்ற மந்திரவாதி கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே ரூ.10 லட்சத்துக்கு போலி மாணிக்க கல் விற்று மோசடி செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் நசீர். அரபு நாட்டில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில இவர் ஊருக்கு வந்தார். அப்போது திருவனந்தபுரம் அரியநாடு பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ் என்பவர் நசீரை சந்தித்தார்.
தான் மந்திரவாதி என்றும், தன்னிடம் ரூ.25 லட்சம் மதிப்பிலான மாணிக்க கல் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் எனவும் கூறினார். ஷாநவாஸ் கூறியதை உண்மை என நம்பிய நசீர் தன்னிடம் ரூ.10 லட்சம் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார்.
உடனே அந்த மந்திரவாதி உங்களுக்காக மாணிக்க கல்லை ரூ.10 லட்சத்திற்கு தருகிறேன் என கூறினார். இதையடுத்து நசீர் மந்திரவாதியிடம் ரூ. 10 லட்சம் கொடுத்து மாணிக்க கல்லை பெற்றுக் கொண்டார்.
அந்த கல்லை வாங்கிய அவர் மற்றொருவரிடம் கொடுத்து சோதனை செய்ததில் அது போலி எனத் தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வட்டியூர்காவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாநவாசை கைது செய்தனர்.
ஷாநவாஸ் இதே போல் பலரிடம் போலி மாணிக்க கல் விற்று மோசடி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications