ரூ.1.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊழல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் கைது
மதுரை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரிலிருந்து விடுவிக்க அரசு சித்த மருத்துவரிடம் ரூ.1.2 லட்சம் லஞ்சம் கேட்டு வாங்கிய ஊழல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரும் அவரது உறவினரும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் உதவி மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வரும் சித்தா டாக்டர் அசோக்குமார். இவர், மதுரை கே.கே.நகரில் கிளினிக் வைத்துள்ளார்.
டாக்டர் அசோக்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இந்தப் புகார் பற்றி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியன் விசாரணை நடத்தி வந்தார்.
இந்த வழக்கில், டாக்டர் அசோக்குமாருக்கு சாதகமாக நடந்து கொள்ள அவரிடம் இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியன் ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்ட ஆரம்பி்த்தார்.
இந்தப் பணத்தை தனது உறவினரும், மருத்துவமனையில் தலைமை மருந்தாளுனராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான நமச்சிவாயம் என்பவர் மூலமாக டாக்டரிடம் கேட்டு வந்தார் இன்ஸ்பெக்டர் பாண்டியன்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரியே லஞ்சம் கேட்டு மிரட்டியதால் அதிர்ச்சியடைந்த டாக்டர் அசோக்குமார், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. அம்பிகாபதியிடம் புகார் தந்தார்.
இதையடுத்து அவர் தந்த யோசனைப்படி, முன் பணமாக ரூ.1.2 லட்சத்த்தை தருவதாகக் இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியனிடம் டாக்டர் அசோக்குமார் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டு கட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் டாக்டரிடம் தந்தனர்.
இதை வாங்க இன்ஸ்பெக்டரின் சார்பில் அவரது உறவினர் நமச்சிவாயம் கே.கே.நகரில் உள்ள டாக்டர் அசோக்குமாரின் கிளினிக்கிற்கு சென்றார்.
அங்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையில் போலீஸ் படையினர் மறைந்து நின்றது.
டாக்டரிடம் நமச்சிவாயம் பணத்தை பெறும்போது லஞ்ச ஒழிப்பு படையினர் அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்ஸ்பெக்டருக்காக பணம் வாங்க வந்ததை ஒப்புக் கொண்டார்.
இதைடுத்து போலீசார் கூறியபடி நமச்சிவாயம் டெலிபோனில் இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியனுடன் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிவிட்டதாக தெரிவித்தார். உடனே, இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியன் பணத்தை வீட்டில் வந்து கொடுக்குமாறு கூறினார்.
இதன்மூலம் இதில் இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியனுக்கு தொடர்ப்புள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டனர் லஞ்ச ஒழிப்பு போலீசார்.
இதையடுத்து மதுரை டி.ஆர்.ஓ. காலனியில் உள்ள இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டியனின் வீட்டு்ககு நமச்சிவாயத்தை லஞ்ச ஒழிப்புப் போலீசார் பணத்துடன் அனுப்பினர்.
அதை வாங்கிய பெருமாள் பாண்டியனை அங்கு மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கி பிடிபட்டது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications