உணர்ச்சிவசப்படாமல் அமைதி காக்க வேண்டும்-தமுமுக
சென்னை: அயோத்தி தீர்ப்பு எவ்வாறாக இருந்தாலும் அமைதி காத்து, சட்டம்- ஒழுங்கை பேணிக் காக்குமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1949ம் ஆண்டு முதல் நடந்து வரும் பாபர் மசூதி வழக்கில் செப்டம்பர் 24ம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க தேதி குறிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பை வெளியிடக் கூடாது என ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய இருதரப்பும் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து உச்ச நீதிமன்றம் இடைக் காலத் தடையை நீக்கி உத்தர விட்டுள்ளதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனமார வரவேற்கிறது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட்டமாக கருதாமல், அவரவர் தனியாக இறைவனுக்கு நன்றி செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அதே சமயம் தீர்ப்பு பாதகமாக வந்தால் அதை சட்டரீதியாக அணுகுவதற்கு முஸ்லிம் அமைப்புகள் தயாராக உள்ளன என்பதை நினைவில் கொண்டு உணர்ச்சிவசப்படாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
பொது அமைதி, சட்டம்- ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications