10 நாட்களில் ரூ 2297 கோடி வருவாய்... ரயில்வே சாதனை!
டெல்லி: பத்தே நாட்களில் ரூ 2297 கோடியை வருவாயாக ஈட்டி சாதனைப் படைத்துள்ளது ரயில்வே.
இம்மாதம் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான 10 நாட்களில் ஈட்டப்பட்ட வருவாய் இது.
ரெயில்வே துறைக்கு கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ரூ. 2170.90 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டின் அதே 10 நாள் வருமானம் ரூ. 2297.01 கோடியாக அதிகரித்துள்ளது. இது 5.81 சதவீத உயர்வாகும்
கடந்த ஆண்டின் இதே 10 நாட்களில் ரெயில்வே துறைக்கு சரக்குப் போக்குவரத்து மூலமாக ரூ. 1487.33 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டில் இது 1497.63 கோடியாக அதிகரித்துள்ளது. இது 0.69 சதவீத உயர்வாகும்.
கடந்த ஆண்டில் பயணச்சீட்டு மூலம் கிடைத்த வருமானம் ரூ. 601.68 கோடி. இந்த ஆண்டின் இதே 10 நாட்களில் இது 18.58 சதவீதம் அதிகரித்து ரூ. 713.45 கோடியாக உயர்ந்துள்ளது. பெட்டிகள் தயாரிப்பு மூலம் கிடைத்த வருமானம் ரூ. 59.67 கோடியில் இருந்து ரூ. 62.60 கோடியாக அதிகரித்துள்ளது. இது 4.68 சதவீத உயர்வாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 10 நாட்களில் 19.75 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் இது 23.32 கோடியாக அதிகரித்துள்ளது.
புறநகர் ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 10.64 கோடியில் இருந்து 12.75 கோடியாக அதிகரித்துள்ளது. இதர ரெயில்களில் முன்பதிவு செய்தோர் எண்ணிக்கை 9.10 கோடியில் இருந்து 10.46 கோடியாக அதிகரித்துள்ளது.
பண்டிகை சீஸன் என்பதால் அடுத்து வரும் நாட்களில் வருவாய் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.