பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி, லக்னெள நீதிமன்றம்: ஹெலிகாப்டர்கள மூலம் கண்காணிப்பு!
லக்னெள: அயோத்தி நிலம் அமைந்துள்ள உத்தரப் பிரதேசத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று இந்த நிலப் பிரச்சனையில் தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை வளாகம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தது. அங்கு மத்தியப் படைகளுடன் மாநில போலீசாரும் அதிரடிப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற வளாகப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வழக்கின் வாதி, பிரதிவாதி மற்றும் வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு சம்பந்தமில்லாத மற்ற வழக்கறிஞர்கள் உள்ளே வரக் கூடாது என்று தடை விதி்க்கப்பட்டது. அதே போல பத்திரிக்கையாளர்களும் உள்ளே வர தடை விதி்க்கப்பட்டிருந்தது.
தீர்ப்பு முழுமையாக வெளியாகும் வரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து யாரும் வெளியேறவும் அனுமதி தரப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீர்ப்பின் விவரம் வெளியிடப்பட்டது.
அதே போல அயோத்தி நிலத்தையும் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மத்திய, மாநில போலீஸ் படைகள் கண்காணித்தன. சர்ச்சைக்குரிய நிலம் அமைந்துள்ள இடம் முழுக்க முழுக்க மத்தியப் படைகளின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்தும் நேபாளத்திலிருந்து உத்தரப் பிரதேசத்துக்குள் நுழைவதற்கு தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications