பாபர் மசூதியின் உட்பகுதி இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் சொந்தமானது-நீதிபதி சுதிர் அகர்வால்

இதுகுறித்து அகர்வால் பிறப்பித்துள்ள உத்தரவில், சர்ச்சைக்குரிய கட்டடத்தின் மையத்தில் உள்ள டோம் உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள். இது இந்துக்களின் நம்பிக்கையாகும். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த இடத்தில் தற்போது உள்ளது அப்படியே நீடிக்க வேண்டும் (இங்குதான் ராமர் சிலையை வைத்துள்ளனர்). அதில் மாற்றம் செய்யக் கூடாது.
இருப்பினும் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உட்பகுதி இந்துக்களுக்கும், முஸ்லீ்ம்களுக்கும் சொந்தமானதாகும். காரணம், இந்தப் பகுதியை இரு தரப்பினரும் பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே இரு தரப்பினரும் இதை பயன்படுத்தலாம்.
சர்ச்சைக்குரிய கட்டடத்தின் வெளிப் பகுதியில் உள்ள ராம் சபுத்ரா, சீதா ரசோய், பந்தர் ஆகியவற்றை வேறு யாரும் உரிமை கோராவிட்டால் அதை நிர்மோகி அகராவுக்கு வழங்க வேண்டும்.
முஸ்லீம் குழுக்களுக்கும் சர்ச்சைக்குரிய நிலத்தின் மூன்றில் ஒரு பங்கைத் தர வேண்டும். அவர்களுக்கு கூடுதலாக தேவைப்பட்டால், வெளிப்பகுதியிலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கலாம். அதற்குப் பதிலாக உட்புறப் பகுதியிலிருந்து மற்றவர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்கலாம்.
அயோத்தியா சட்டப்படி மத்திய அரசு கடந்த 1993ம் ஆண்டு மத்திய அரசு கையகப்படுத்திய நிலத்தை அனைத்துத் தரப்பினருக்கும் எந்த வகையிலும் பிரச்சினை இல்லாத வகையில் பிரித்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளை யாருக்கும் இடையூறு இல்லாமல் செய்ய வழி ஏற்படுத்த வேண்டும் என்று அகர்வால் கூறியுள்ளார்.
274 நூல்கள், 798 தீர்ப்புகளைப் புரட்டிய நீதிபதி:
தனது தீர்ப்பை எழுதுவதற்காக வேத பாராயணங்கள் உள்ளடக்கிய 274 நூல்களையும், 798 தீர்ப்புகளையும் பரிசீலித்து ஆய்வு செய்துள்ளார் நீதிபதி சுதீர் அகர்வால்.
நீதிபதி கானுடன் இணைந்து மெஜாரிட்டியான தீர்ப்பை அளித்தவர் சுதீர் அகர்வால். 21 வால்யூம்கள் அடங்கிய தீர்ப்பை கொடுத்துள்ளார் அகர்வால். மொத்தம் 5238 பக்கங்களைக் கொண்டதாக இவரது ரெபரன்ஸ் நூல்களின் எண்ணிக்கை உள்ளது.
ஆதி காலம், இடைக்காலம், நவீன வரலாறு என பலதரப்பட்ட காலத்து நூல்களையும், அந்தக் காலத்து தீர்ப்பு முதல் சமீபத்திய தீர்ப்புகள் வரை படித்துப் பார்த்து, ஆய்வு செய்து தனது தீர்ப்பை எழுதியுள்ளாராம் அகர்வால்.
தனது தீர்ப்புக்கான ரெபரன்ஸுக்காக 19வது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கோர்ட் தீர்ப்பையும் கூட ஆய்வு செய்துள்ளார் அகர்வால். மேலும் 1843ல் பரபரப்பாக பேசப்பட்ட டிரேசி பெரேஜ் வழக்கின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் கடந்த 2008ல் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications