தேசிய ஒருமைப் பாட்டில் புதிய அத்தியாயம்-அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி
டெல்லி: இந்துக்கள் ராமர்கோவில் கட்ட தற்போதைய அயோத்தி தீர்ப்பு வழி வகுத்துள்ளது. அதேசமயம், இந்துக்களும்,முஸ்லீம்களும் இணைந்து நல்லிணக்கத்துடன் செயபல்படுவதற்கான வாய்ப்பும், தேசிய ஒருமைப்பாட்டில் புதிய அத்தியாயம் மலரவும் இது வழி வகுத்துள்ளது என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அத்வானி.
அயோத்தி தீர்ப்பு வெளியானவுடன் அத்வானி வீட்டில் பாஜக தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது பாஜக தலைவர் நிதின் கத்காரியும் உடன் இருந்தார்.
பின்னர் அத்வானி வெளியிட்ட அறிக்கையில், தீர்ப்பில், இந்துக்கள் கோவில் கட்டிக் கொள்ள உரிமை உள்ளது என்பதை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே ராமர் பிறந்த இடத்தில் மிகப் பெரிய கோவிலை கட்டுவதற்கான மாபெரும் பணியின் முதல் தொடக்கத்திற்கு வழி ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் வலுப்படவும், இந்து முஸீலம் சமூகத்தவர் ஒருங்கிணைந்து செயல்படவும், தேசிய ஒருமைப்பாட்டில் புதிய அத்தியாயம் மலரவும் இந்த தீர்ப்பில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை மிகுந்த முதிர்ச்சியுடன் இந்தியமக்கள் வரவேற்றுள்ளனர். இதற்காக பாஜக நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.
கோயில் கட்ட உதவ வேண்டும்-முரளி மனோகர் ஜோஷி:
அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனைத்துத் தரப்பினரும உதவ வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோதி கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு வழி செய்துள்ளது. கோயில் கட்டுவதற்கு அனைவரும் உதவ வேண்டும்.
மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர் மசூதியும், சமாதி தோட்டமும் இருந்தது என்ற சன்னி முஸ்லிம் வக்ப் வாரியத்தின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
எனவே ராமர் கோயில் கட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ராமர் கோயில் கட்டுவதை தேசிய இயக்கமாக கருத வேண்டும். இதில் வேறுபாட்டுக்கு இடமில்லை என்றார்.












Click it and Unblock the Notifications