தூத்துக்குடி அதிமுக ஆர்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும்-வைகோ
மதுரை: தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி நுகர் பொருள் வாணிப கழகத்தில் தரக்கட்டுப்பாடு துணை ஆய்வாளராக பணியாற்றிய முருகன் அங்கு நடைபெற்ற ஊழலை, உணவு பொருள் கடத்தலை மேல் அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் புகார் செய்த காரணத்தினால் அவர் படு கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் முருகன் தற்கொலை செய்து கொண்டதாக சிலர் கூறி வருகின்றனர்.
அவர் பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்ததால் தான் கொலை செய்யப்பட்டார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மேலும், அவரது உடலில் காயங்கள் உள்ளன.
எனவே இதில் உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்து கூண்டில் ஏற்றி தண்டிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு அரசே ஏற்பாடு செய்ய வேண்டும் என நான் ஏற்கனவே கூறி உள்ளேன்.
உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி வருகிற 4 ம் தேதி அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. கட்சியும் கலந்து கொள்ளும்.
இந்த கண்ட ஆர்பாட்டத்தில், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் நாசரேத்துரை, சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வக்கீல் ஜோயல், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் உள்பட தொண்டர்கள் பலர் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications