அயோத்தி தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்யும் முன் ஆய்வு: முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்
லக்னெள: அயோத்தி விவகாரத்தில் அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆய்வு செய்ய அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் 10 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு வரும் 9ம் தேதி கூடி விரிவான ஆய்வு மேற்கொள்கிறது.
இது குறித்து வாரிய உறுப்பினர் மெளலானா காலித் ரஷீத் பிர்னகி மாஹ்லி கூறுகையில்,
அயோத்தி தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு முன்பாக தீர்ப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்ய உள்ளோம்.
வாரிய உறுப்பினர்களில் பெரும்பாலானோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆய்வு செய்ய 10 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வரும் 9ம் தேதி கூடி விரிவான ஆய்வு மேற்கொள்ளும்.
இதையடு்த்து வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள 51 உறுப்பினர்கள் கொண்ட செயற்குழுக் கூட்டம் கூடும். இதில் மேல் முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்.
தீர்ப்பு வேதனை அளிக்கிறது-கிலானி:
அயோத்தி தீர்ப்பு வேதனையளிப்பதாக காஷ்மீர் ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், உலகில் எந்த ஒரு பகுதியிலும் மசூதியை இடிப்பது முஸ்லிம்களுக்கு கவலைதரக்கூடிய செயல் தான் என்றார்.
முஸ்லீம்களுக்கு ஏமாற்றம்-ராம் விலாஸ் பாஸ்வான்:
அயோத்தி தீர்ப்பு முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், முஸ்லீம்கள் இதையே இறுதித் தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேணடியதில்லை. அதே போல பாஜக, ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, பஜ்ரங் தள் ஆகியவை இத்தீர்ப்பை வெற்றியாகக் கருதி கொண்டாடக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications