அணுமின் நிலைய கடலோரப் பகுதிகளில் மீன் பிடிக்கத் தடை: ஆளுநர் பர்னாலா உத்தரவு
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையப் பகுதியில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஆயிரம் மெகா வாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் உலை வரும் மார்ச் மாதம் மின் உற்பத்தியை துவங்கும் என இந்திய அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கூடங்குளத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மீன் பிடிக்கத் தடை விதித்து தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னலா உத்தரவிட்டுள்ளார்.
கூடங்குளம் கடலோர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 500 மீட்டர் ஆரத்திற்கு உட்பட்ட பகுதியில் எந்தவொரு மீன்பிடி படகு மூலமும் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.