அயோத்தி தீர்ப்பில் முஸ்லீம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
நெல்லை: அயோத்தி தீர்ப்பில் முஸ்லீம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் அது கிடைக்கும் என நம்புகிறோம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நெல்லை மாவட்ட தலைவர் யூசுப் அலி கூறும்போது, அயோத்தி தீர்ப்பில் முஸ்லீம்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. சட்ட ரீதியாகவும், அங்குள்ள ரீக்கார்டுகளின் அடிப்படையிலும் தீர்ப்பளிக்காமல் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை வைத்து இடம் பிரித்து கொடுக்க கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். மேல்முறையீடு செய்வதற்கு சன்னி வக்பு வாரியத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக எங்கள் அமைப்பு கடிதம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக வரும் 17ம் தேதி சென்னையில் செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் முடிவு எடுக்கப்படும். நாட்டில் அமைதி நிலவுவதற்கு தவ்ஹீத் ஜமாத் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார்.
தமுமுக நெல்லை மாவட்ட செயலாளர் உஸ்மான்கான் கூறுகையில், அயோத்தி தீர்ப்பு முழுமையாக திருப்தி அளிக்கவில்லை. முஸ்லீம்களுக்கும் அதில் பங்கு உள்ளது என்று கூறியுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம்.
மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே அனைவரும் அமைதி காப்போம் என்றார்.