பேண்ட் தொலைந்து போனதாக ஏற்பட்ட தகராறில் மாணவர் படுகொலை
காஞ்சிபுரம்: பேன்ட் திருடி விட்டதாக சந்தேகப்பட்டு தன்னுடன் சண்டை போட்ட மாணவரை, கொடூரமாகக் கொலை செய்த மாணவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஞ்சீபுரம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் சாமிநாதன். எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்து வருகிறார். இவரது முதல் மனைவிக்குப் பிறந்தவர் லோகேஸ்வரன். 18 வயதான லோகேஸ்வரன் ஐடிஐயில் படித்து வந்தார். காஞ்சிபுரத்தில் விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.
நேற்றுகாலை லோகேஸ்வரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையில் குதித்தனர்.
இந்த விசாரணையில் லோகேஸ்வருடன் தங்கிப் படித்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நேந்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் சிக்கினார்.
முதலில் லோகேஸ்வரன் ஒருவரைக் காதலித்து வந்தார். அதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறினார். ஆனால் போலீஸார் நம்பவில்லை. தொடர்ந்து அவரு துருவித் துருவி விசாரித்தபோது, அதுஉண்மை இல்லை என்று தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் தான்தான் லோகேஸ்வரனைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் புருஷோத்தமன்.
இதுகுறித்து புருஷோத்தமன் கொடுத்த வாக்குமூலத்தில்,
நானும், லோகேஸ்வரனும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தோம். நேற்று முன்தினம் இரவு லோகேஸ்வரனின் பேண்ட் ஒன்று மாயமாகி இருந்தது. இதுபற்றி அவர் என்னிடம் விசாரித்தார். பேண்ட்டை நான் திருடியதாக சந்தேகப்பட்டு தகராறு செய்தார்.
இதனால் எங்களிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் லோகேஸ்வன் தூங்கி விட்டார். அவர் மீது ஆத்திரத்தில் இருந்த நான் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அங்கிருந்த கல்லை எடுத்து லோகேஸ்வரன் முகத்தில் ஓங்கி குத்தினேன். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார் என்று கூறினார் புருஷோத்தமன்.