சென்னை-அந்தமான் கப்பலில் 14 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது
சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்லும் கப்பலில் 14 கிலோ கஞ்சா கடத்த முயன்ற தூத்துக்குடி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து நேற்று மாலை அந்தமானுக்கு செல்ல இருந்த பயணிகள் கப்பலில் துணிப் பையுடன் வாலிபர் ஒருவர் ஏற வந்தார்.
அவரை துறைமுகம் போலீஸார் சோதனையிட்டனர். அவரது பையை மோப்ப நாய் சுற்றி சுற்றி வந்து குரைத்தது. இதையடுத்து அந்தப் பையை சோதனையிட்டபோது அதில் 14 கிலோ கஞ்சா இருந்தது.
அவரது பெயர் காஜா முகைதீன் (36) என்றும், தூத்துக்குடி அருகே உள்ள குரும்பூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
வெறும் சில ஆயிரங்கள் கமிஷனுக்காக லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை அவர் கடத்த முயன்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிபிசிஐடி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். கஞ்சாவை தந்து அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.