சுற்றுலாப் பயணிகள் வருகையில் பெரும் மந்தம்-ஏமாற்றத்தில் டெல்லி ஹோட்டல்கள்
டெல்லி: காமன்வெல்த் போட்டியையொட்டி பெருமளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள், பெரும் லாபம் பார்க்கலாம் என காத்திருந்த டெல்லி ஹோட்டல்கள் பெரும் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளன.
பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய ஹோட்டல்கள் வரை அனைவரும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். காரணம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் காணப்படும் பெரும் மந்தமே.
பாதுகாப்பு மற்றும் பல்வேறு குளறுபடிகள் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்களது டெல்லி பயணத் திட்டத்தை ரத்து செய்து விட்டதே சுற்றுலாப் பயணிகள் வருகையில் மந்த நிலை ஏற்பட முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
காமன்வெல்த் போட்டிகளைக் காண பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அவர்கள் மூலம் நல்ல பிசினஸ் நடைபெறும் என ஆர்வத்துடன் இருந்தன ஹோட்டல்கள். ஆனால் பயணிகள் வருகையில் மந்த நிலை காணப்படுவதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பல பெரிய ஹோட்டல் நிர்வாகங்களிடம், போதுமான அளவு அறைகளை ஸ்டாக்கில் வைத்திருக்குமாறு டெல்லி அரசு கேட்டுக் கொண்டிருந்ததாம். ஆனால் தற்போது அதற்கும் அவசியமில்லாமல் போயுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை வைத்து பெருமளவில் காசு பார்த்து விடலாம் என காத்திருந்த டெல்லி ஹோட்டல் நிர்வாகங்கள் இப்போது கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கவலையில் மூழ்கியுள்ளன.