சப்-கலெக்டரை கண்டித்து டாக்டர்கள் போராட்டம்-நோயாளிகள் தவிப்பு
அம்பை: அம்பை அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் குடிபோதையில் இருந்ததாக வந்த தகவலை தொடர்ந்து சப்-கலெக்டர் வீரராகவராவ் விசாரணை நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
அம்பையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 12 டாக்டர்கள் உள்பட 70 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இங்கு டாக்டர் ஒருவர் நேற்று குடிபோதையில் இருந்ததாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வீரராகவ ராவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்று சம்பந்தப்பட்ட டாக்டரிடம் விசாரணை நடத்தினார். அப்போது விசாரணைக்கு அந்த டாக்டர் ஓத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து பணியில் இருந்த டாக்டரிடம் சப்-கலெக்டர் விசாரணை என்ற பெயரில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக ஓட்டு மொத்த டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவமனையின் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் சிவசுப்பிரமணியன் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட டாக்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
வாரத்தில் செவ்வாய்கிழமை (இன்று) அம்பை மருத்துவமனையில் நீரழிவு நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். இதற்காக இன்று 100க்கும் மேற்பட்ட நீரழிவு நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
அவர்களுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் டாக்டர்கள் போராட்டத்தை கண்டித்து அதி்முக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications