தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை: திருநாவுக்கரசர்
ராமநாதபுரம்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர்கள் தேவை என்ற விருப்பம் ஒவ்வொரு தொண்டனுக்கும் உள்ளது. அவர்களின் விருப்பத்தில் எந்த தவறும் இல்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் வழியில் நானும் இதை வலியுறுத்துவேன் என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் 9ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில், எனது 35 வருட அரசியலில் பக்கபலமாக இருந்த ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைப்பு விழா நடைபெறுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் தங்கள் கட்சியின் சார்பில் அமைச்சர்கள் வர வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளனர். அவர்களின் விருப்பத்தில் எந்த தவறும் இல்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் வழியில் நானும் இதை வலியுறுத்துவேன்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், ராமநாதபுரம் லோக்சபா தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல முடியாமல் போனது. எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் இந்த குறை நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
ஏற்கனவே, தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கேஎஸ். இளங்கோவன் திமுகவை எரிச்சல்படுத்தி வந்தார். இந் நிலையில் தற்போது புதிதாக காங்கிரசில் சேர்ந்துள்ள திருநாவுக்கரசாரும் இதே கோரிக்கையை முன் வைத்து திமுகவுக்கு அதிர்ச்சி தந்துள்ளார்.