அன்புமணிக்கு எம்பி சீட் தருவதாக சொல்லி திமுக ஏமாற்றி விட்டது-ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக் கோரி சென்னை சைதாப்பேட்டையில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் பேசிய ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லாதது போல கற்பனை செய்து கொண்டு, பாமகவினர் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதில் எந்தவித கற்பனையும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை. இதை நாங்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறோம்.
2011ம் ஆண்டு பிப்ரவரியில் நடை பெறும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு சமுதாயத்தின் சமூக- பொருளாதார பின்னணியோடு கூடிய விவரங்கள் கிடைக்கும்.
தனியாக கணக்கெடுப்பு நடத்தினால் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்று தலைகளை மட்டும்தான் கணக்கெடுக்க முடியும். இதனால் எந்த பயனும் கிடைக்காது. எனவே 2011ம் ஆண்டு ஜூன் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும் என்று கூறுவது வெறும் கண்துடைப்பு.
நான் இந்த அரசை எப்போதும் போற்றிப் புகழ்ந்து கொண்டு மட்டும் இருக்க முடியாது. மக்கள் பிரச்சனைகளை முன்நிறுத்தி பாமக தொடர்ந்து போராட்டங்களை நடத்தும். இதை இந்த அரசால் தாங்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் மீண்டும் மேலவை அமைக்க வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியின் 25 வருட கனவு. அது இந்த ஆண்டு நிறைவேறியதற்கு பாமக எம்எல்ஏக்கள் அளித்த ஆதரவுதான் காரணம்.
அன்புமணிக்கு ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக திமுகவினர் கூறி வந்தனர். ஆனால் பிறகு நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டி எங்களை ஏமாற்றி விட்டனர்.
நாங்கள் அரசியல் வியாபாரம் நடத்துவதாகவும், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டுள்ளார். திமுகவும் பல்வேறு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்துள்ளது. அவர்களுக்கு பாமகவை பற்றி விமர்சிக்க தகுதியில்லை என்றார்.
அதிமுக கூட்டணியில் சேர பாமக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.