ஜெ.வுக்கு கொலை மிரட்டல் விவகாரம்-மார்த்தாண்டத்தில் போலீசார் வீடு வீடாக விசாரணை
மார்த்தாண்டம்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்ட வழக்கில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தி்ல வீடு வீடாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
மதுரையில் வரும் 18ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளக் கூடாது என கூறி ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதங்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் டிஜிபியிடம் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை, தஞ்சை சென்று அஞ்சல் நிலைய அலுவலகங்கள், விஏஓக்கள் மற்றும் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் விசாரித்தனர். இது தவிர இக்கடிதங்கள் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே மதுரை மற்றும் குமரியில் இருந்து மேலும் 2 மிரட்டல் கடிதங்கள் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டன. இதில் ஒரு கடிதத்தில் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஓய்.எஸ் பவன், ஆர்.சி தெருவை சேர்ந்த அனுமோகன் என்று முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் நேற்று சென்னையில் இருந்து புலனாய்வு துறை எஸ்ஐ ஜோசப் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் வந்தனர். அவர்கள் மார்த்தாண்டம் போலீசாருடன் சேர்ந்து ஆர்சி தெருவில் வீடு வீடாக அதிரடி விசாரணை நடத்தினர். அதில் அனுமோகன் என்ற பெயரில் யாரும் இல்லை என தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
மொத்தத்தில் இதுவரை ஜெயலலிதாவுக்கு 9 மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுதாவூரில் ஜெயலலிதாவுக்கு பலத்த பாதுகாப்பு:
இந் நிலையில் கடந்த 4 நாட்களாக சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா தங்கியுள்ளதால் அந்த பங்களாவை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 3 இன்ஸ்பெக்டர்கள், 12 சப்-இன்ஸ்பெக்டர்கள், 58 காவலர்கள் உள்பட மொத்தம் 75 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா வெளியூர்களுக்கு செல்லும்போது அவரது காருக்கு முன்னும் பின்னும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 12 பேர் வாகனங்களில் செல்வார்கள்.
மேலும் குண்டு துளைக்காத கார் ஒன்றும் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், நவீன ரக ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தங்கியிருக்கும் போது, அவரது வீட்டு முன்பு எவ்வளவு பாதுகாப்பு டப்பட்டிருக்குமோ அதே அளவு பாதுகாப்பு சிறுதாவூர் பங்களா முன்பும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இவர்களுடன் உள்ளூர் போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications