''மதுரை ஆர்ப்பாட்டம் அதிமுகவின் 2வது சுதந்திரப் போர்!!: உலக வரலாற்றில் இடம்பெறும்!!!!''

மதுரையில் வரும் 18ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கு கூட்டம் சேர்ப்பது தொடர்பாக சிவகங்கை மாவட்ட அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டம் காரைக்குடியில் நடந்தது.
அதில், அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன், கொள்கை பரப்புச் செயலாளர் தம்பித்துரை, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேர்தல் பிரிவுச் செயலாளர் ஜெயராமன், மாஜி அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாநில மகளிர் அணிச் செயலாளர் கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விஸ்வநாதன் பேசுகையில், மதுரையில் புரட்சித் தலைவி அம்மாவின் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசியலின் போக்கை தலைகீழாக மாற்றத்தக்கதாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் புரட்சி்த் தலைவி அலை வீசுகிறது. இதை 18ம் தேதி உறுதிப்படுத்தும் வகையில் நாமெல்லாம் கூட வேண்டும். அதிமுகவினர் இதை இரண்டாவது சுதந்திரப் போராகக் கருத வேண்டும் என்றார்.
திருப்புமுனையை ஏற்படுத்து-:ஓ.பன்னீர்செல்வம்:
பன்னீர்செல்வம் பேசுகையி்ல், நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலான ஆதரவை சிவகங்கை மாவட்டக் கழகம் தந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியைத தருகிறது.
அதிமுக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இயக்கம். இந்த இயக்கம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதை உணர்ந்து அதிமுகவினர் செயலாற்ற வேண்டும். தமிழ் சமுதாயம் வளர, ஏழைத் தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்க உருவாக்கப்பட்டது தான் அதிமுக.
தமிழகத்தை 21 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்து பெருமை பெற்ற இயக்கம் அதிமுக. மதுரையில் அம்மா அவர்களது தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார்.
உலக வரலாற்றில் இடம்பெறும்-செங்கோட்டையன்:
செங்கோட்டையன் பேசுகையில், மதுரையில் புரட்சித் தலைவி அம்மாவின் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் உலக வரலாற்றில் இடம்பெறும் நிகழ்ச்சியாக வேண்டும். சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் மற்ற மாவட்டங்களை விஞ்சும் வகையில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
தம்பித்துரை பேசுகையி்ல், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தமிழகத்தில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் மதுரையில் ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்திக் காட்ட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications