அயோத்தி-இந்து அமைப்புசன் சமரசம் பேசும் பாபர் மசூதி கமிட்டி தலைவருக்கு கொலை மிரட்டல்

அயோத்தி பிரச்சினையை சுமூகமான முறையில் முடிக்கும் முயற்சிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதை ஆரம்பித்து வைத்திருக்கிறார் முஸ்லீம் பெரியவரும், பாபர் மசூதி கமிட்டி தலைவருமான அன்சாரி. அயோத்தி நில உரிமை தொடர்பாக இவர்தான் முதலில் வழக்குப் போட்டவர். அதாவது 1949ம் ஆண்டு பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அன்சாரி முதன் முதலில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்தான் இப்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. தற்போது இவருக்கு 90 வயதாகிறது.
நேற்று அயோத்தி அனுமன் கோவிலுக்குச் சென்ற பெரியவர் அன்சாரி, அங்கு மகந்த் ஞானதாஸ் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினர். பின்னர் மீண்டும் 15 நாட்களுக்குள் சந்தித்து மறுபடியும் பேசுவது என முடிவெடுத்தனர்.
இந்த நிலையில் அன்சாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்சாரி கூறுகையில்,
நான் மஹந்த் கியான்தாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் எனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். என்னை ஒழித்து கட்ட போவதாக கூறுகின்றனர்.
எனக்கு அரசியல் தரப்பிலிருந்தும் நிறைய மிரட்டல்கள் வருகின்றன. ஆனால் இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இவர்களால் என்னை நிறுத்த முடியாது. சுமூகமான முறையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலுகிறேன், அவ்வளவுதான்.
வழக்கை நடத்துவதற்காக ஜபாரியேப் ஜிலானி (வக்பு வாரிய வக்கீல்) நிதி திரட்டுகிறார். இதற்காக வாரியத்திடமிருந்து பணமும் பெறுகிறார். அதேசமயம், தனக்கு நல்ல பாதுகாப்பையும் தேடி வைத்துக் கொண்டுள்ளார். இப்போது என்னையே மிரட்டுகிறார்.
1949ம் ஆண்டு நான் இந்த வழக்கை தொடர்ந்தபோது இந்த ஜிலானி எங்கே போயிருந்தார். எனக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. அல்லாதான் எனக்குப் பாதுகாப்பு. அமைதியை நான் விரும்புகிறேன், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ அல்லது இரு மாதங்களிலோ அது வர வேண்டும். நமக்கு 3 மாதம்தான் டைம் இருக்கிறது. எனவே எனது முயற்சிகளைத் தொடருவேன்.
அதே நேரத்தில் இந்து சகோதரர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இனி மேலும் சண்டை போட்டு கொண்டிருப்பது சரியாக இருக்காது. இதனால் நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் தான் நஷ்டம். அனைத்து தரப்பினரும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அன்சாரி.
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக அயோத்தி வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான நிர்மோஹி அகாரா அமைப்பின் தலைவர் மஹந்த் பாஸ்கர் தாஸ் கூறுகையில், பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். நிச்சயம் மஹந்த் கியான்தாஸ் கூறுவதை ஏற்பேன் என்றார்.
அயோத்தி வழக்கின் தீர்ப்பில், நிர்மோஹி அகாராவுக்கு மூன்றில் ஒரு பங்கு இடத்தைக் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications