சீனாவின் கடும் எதிர்ப்பை நிராகரித்தது நோபல் கமிட்டி-லியூ ஜியாபோவுக்கு அமைதி நோபல் பரிசு!
அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் முதல் சீனர் லியூ என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கிய விமர்சகராக, அரசியல் கட்டுரையாளராக, ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கக் கூடியவராக பன்முகம் கொண்டவராக திகழ்பவர் லியூ. தனது எழுத்துக்களுக்காக சீன அரசால் பலமுறை சிறைக்கு அனுப்பி தண்டனைக்குட்படுத்துப்பட்டவர்.
சீனாவில் அமைதியான முறையில் அரசியல் சீர்திருத்தத்திற்காக பாடுபட்டு வருவதைப் பாராட்டும் வகையில் தற்போது அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை நோபல் கமிட்டி வழங்கியுள்ளது.
54 வயதாகும் லியூ, சீன அரசுக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்புக் குரல் எழுப்பி வரும் முக்கியப் பிரமுகர் ஆவார். தற்போது 11 ஆண்டு சிறைவாசத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியூவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்த நிலையில், நார்வே அரசுக்கு சீன அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. லியூவுக்கு நோபல் பரிசு கொடுத்தால் இரு நாட்டு உறவும் சீர்கெடும் எனவும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது கணவருக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது குறித்து லியூவின் மனைவி லியூ ஸியா கூறுகையில், இந்த செய்தி எனது கணவரை எட்டுமா என்பதே தெரியவில்லை. அவருடன் தொலைபேசியில் கூட பேச முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்றார் வேதனையுடன்.
லியூவுக்கு கிடைத்துள்ள நோபல் பரிசு, சீனாவில் நீரு பூத்த நெருப்பாக இருந்து வரும் ஜனநாயக ஆதரவு இயக்கங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுக்கு எதிரான எதிர்ப்பலைகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இருபது ஆண்டுகளாக சீன அரசுக்கு எதிராக கடுமையாக போராடி வருபவர் லியூ. 1989ம் ஆண்டு முதல் தொடர்ந்து அவரை அடிக்கடி சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வருகிறது சீன கம்யூனிஸ்ட் அரசு. சீன சட்டத்தை மீறி விட்டார் என்றுகூறி சிறையில் அடைப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் லியூ கைது செய்யப்பட்டார்.அவரை கோர்ட்டில் நிறுத்திய சீன அரசு 11 ஆண்டு சிறைத் தண்டனை வாங்கிக் கொடுத்து உள்ளே போட்டு வைத்துள்ளது.
தற்போது அமைதிக்கான நோபல் பரிசை லியூ எப்படி பெறுவார் என்ற பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.