நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டி திறக்க வைத்த ஜெயலலிதா: கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
சென்னை: நெசவாளர்களை வறுமையில் வாடவிட்டு, கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைமைக்கு ஆளாக்கிய ஜெயலலிதா இலவச வேட்டி, சேலை திட்டத்தைப் பற்றி பேசவே அருகதையற்றவர் என்று கைத்தறித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இலவச வேட்டி, சேலை திட்டம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ள புகார்களுக்கு பதிலளித்து ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலவச வேட்டி, சேலை திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. அவரது ஆட்சிக் காலத்தில் 2005-06ம் ஆண்டில் லாபம் ஈட்டிய கைத்தறி சங்கங்கள் 760, அவற்றின் விற்பனை மதிப்பு ரூ.719 கோடி.
ஆனால் திமுக ஆட்சியில் 2009-10ம் ஆண்டில் 946 கைத்தறி சங்கங்கள் லாபம்ஈட்டியுள்ளன. அவற்றின் விற்பனை மதிப்பு ரூ.911 கோடியாக உயர்ந்துள்ளது.
126 விசைத்தறி சங்கங்கள் லாபகரமாக இயங்கி வருகின்றன. 5 கூட்டுறவு நூற்பாலைகள், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலை ஆகியவை லாபத்தில் இயங்கி வருகின்றன.
இலவச வேட்டி சேலைத் திட்டத்தில் டெண்டர் முறையே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச வேட்டி சேலை நெய்வதற்காக கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து நூல் வழங்கப்பட்டு வருகிறது.
இலவச வேட்டி, சேலை திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர் ஜெயலலிதா. ஏனென்றால் 2001-2002 மற்றும் 2002-2003 ஆகிய 2 ஆண்டுகள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் நெசவாளர்களை வறுமையில் வாடவிட்டு கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைமைக்கு ஆளாக்கியவர் தான் இந்த ஜெயலலிதா என்று கூறியுள்ளார் ராமச்சந்திரன்.