கர்நாடக ஆளுநரின் செயல் கேவலமானது: தமிழக பாஜக
சென்னை: கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் ஒரு காங்கிரஸ்காரரை போல் நடந்து கொண்டது மிக கேவலமானது என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தை ஒரு சில எம்.எல்.ஏக்கள் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுவதை தடுக்கவே கட்சித் தாவல் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.
கர்நாடகத்தில் சில எம்.எல்.ஏக்கள் ஆட்சியை கவிழ்க்க கட்சிக்கு விரோதமாக ஈடுபட்டுள்ளனர். சபாநாயகருக்கு இது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிய வந்ததும் கட்சித்தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை.
அரசியல் சட்டரீதியாக ஒரு அரசாங்கத்தை நடத்த முடியாமல் போனாலோ அல்லது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனாலோ மட்டும்தான் ஆட்சி அதிகாரத்தில் கவர்னர் தலையிட முடியும்.
ஆனால் கவர்னர் பரத்வாஜ் ஒரு காங்கிரஸ்காரரை போல் நடந்து கொண்டது மிக கேவலமானது.
சோனியா காந்தியின் எடுபிடி போலவே அவர் செயல்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மத்திய சட்ட அமைச்சராக இருந்தபோது மிகவும் தரம் தாழ்ந்து, போபர்ஸ் ஊழலில் சிக்கிய குவோத்ரோச்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதை ரத்து செய்ய லண்டனுக்குச் சென்று உதவி செய்தவர் தான் இந்த பரத்வாஜ்.
எதியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபித்துவிட்டது. இனியாவது தான் செய்த தவறுக்கு பொறுப்பேற்று கவர்னர் பரத்வாஜ் உடனே பதவி விலக வேண்டும். அதுதான் அவருக்கும், கவர்னர் பதவிக்கும் கெளரவம்.
பெரும்பான்மையுடன் இருக்கும் ஒரு அரசை முடக்கவோ, டிஸ்மிஸ் செய்யவோ முடியாது. அப்படி செய்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். எனவே அந்தச் செயலை மத்திய அரசு செய்யாது என்று நம்புகிறேன் என்றார்.
துக்ளக் சோ கருத்து:
துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரும் முன்னாள் பாஜக ராஜ்யசபா நியமன எம்பியுமான சோ கூறியுள்ளதாவது:
எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து கர்நாடக சபாநாயகர் எடுத்த முடிவில் எந்தத் தவறும் இல்லை. கட்சி மாறிச் சென்றது தெரிய வந்தால் எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார்.
சபாநாயகரின் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் 16 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளார். அதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் செய்தார் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.
ஆனால் இதில் கவர்னர் தலையிட முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் இல்லை. இப்படித்தான் செயல்பட வேண்டும். அந்த எம்.எல்.ஏக்களையும் வைத்துதான் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று கவர்னர் எந்த நிபந்தனையும் போட முடியாது. இந்த விஷயத்தில் கவர்னரின் நடவடிக்கை தவறானது.
கர்நாடக அரசு கவிழ்வதற்கு கவர்னர் உதவி செய்கிறார். தான் ஒரு காங்கிரஸ்காரர் என்ற விசுவாசத்தை அவர் காட்டுகிறார் என்றே தெரிகிறது என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன்,
அனைத்து சதிகளையும் முறியடித்து பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதற்காக காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகளை நாடு முழுவதும் பாஜக அம்பலப்படுத்தும் என்றார்.