16 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா வெற்றி!
கர்நாடக பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அந்தக் கட்சியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து அக்டோபர் 12ம் தேதி மாலை 5 மணிக்குள், சட்டசபையில் மெஜாரிடியை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் எதியூரப்பாவுக்கு ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டார்.
அதற்கு முதல்வர் எதியூரப்பா இன்று தனது பலத்தை நிரூபிப்பதாக அறிவித்தார்.
எதியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள 19 எம்.எல்.ஏ.க்களில் பாஜகவைச் சேர்ந்த 11 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவியில் இருந்து நீக்க சபாநாயகர் போப்பையா நடவடிக்கை மேற்கொண்டார். அதே போல அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற 5 சுயேச்சை எம்எல்ஏக்களையும் சஸ்பெண்ட் செய்தார்.
ஆனால் யாரையும் சஸ்பெண்ட் செய்யாமல் மொத்தமுள்ள எம்எல்ஏக்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று எதியூரப்பாவுக்கு ஆளுநர் பரத்வாஜ் சபாநாயகருக்கு உத்தரவிட்டார். ஆனால் அதையும் மீறி 16 பேரை சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் போபய்யா.
இதனால் கர்நாடக சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 206 ஆக குறைந்துவிட்டது. இதில் ஆளும் பாஜகவிற்கு 103 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசு வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.
கலாட்டா - காயம்:
பலத்தை நிரூபிப்பதற்காக இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் யாரும் சட்டசபைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் சட்டசபைக்குள் நுழைய முயன்றபோது வாயில்கள் மூடப்பட்டன. ஆனால் தேவ கவுடாவின் மகன் ரேவண்ணா வாயில் காவலர்களுடன் மோதினார். இதில் சில காவலர்கள் காயமடைந்தனர். ஒரு காவலர் மயங்கி விழுந்தார்.
பின்னர் கதவுகளைத் திறந்துகொண்டு நுழைந்தனர். இவர்களுக்கு மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். அவர்களை அவைக் காவலர்கள் தடுத்தபோது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு அடிதடி நடந்தது. சில எம்எல்ஏக்கள மேஜை மீது ஏறி நின்று கத்தினர்.
இந்நிலையில் பெரும் ரகளையுடன் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதியூரப்பா அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். எதியூரப்பா அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதாகக் கூறி சட்டசபையையும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதையடுத்து பாஜக உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர்.
சட்டசபை கலைப்பு?:
ஆனாலும் இந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் 16 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு நிரூபிக்கப்பட்ட மெஜாரிட்டி சட்டப்படி செல்லாது என்பதால் சட்டசபையை கலைக்க வேண்டும் என்று கோரியுள்ளன.
இது தொடர்பாக கவர்னரின் அறிக்கையை ஆய்வு செய்ய மத்திய அமைச்சரவை இன்று மாலை கூடலாம் என்று தெரிகிறது.
அதில் சட்டசபையை முடக்குவது அல்லது கலைப்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
இதற்கிடையே நம்பிக்கை ஓட்டில் வெற்றி பெற்ற பிறகு கர்நாடக மாநில சட்டசபை பாஜக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.