அதிமுகவின் இதயம் கொங்கு மண்டலம்-வைகை செல்வன் பேச்சு
திருப்பூர்: கொங்கு மண்டலம் தான் அ.தி.மு.க.-வின் இதயம் என்று அ.தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணி கலந்தாய்வு கூட்டம் குமார் நகர் கருப்பராய சுவாமி கோவில் மண்டபத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மாநில இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது,
அ.தி.மு.க. என்ற ஜனநாயக கதவு வழியாக சாமானியனும் கூட நுழைந்து புகழ்பெற முடியும். அதே வேகத்தில் கட்சியை அணையா விளக்காக காக்க வேண்டும். அவ்வாறு செயல்படும் போது தான் வெற்றி நம்மை வந்தடையும். வேண்டுமானால் வெற்றியைத் தள்ளிபோடலாமே தவிர தவிர்க்க முடியாது.
ஒவ்வொரு தேர்தலிலும் கிடைக்கும் வெற்றியை வேட்பாளரின் தனிப்பட்ட வெற்றியாகக் கருதாமல், நம்முடைய கட்சியின் வெற்றியாக நினைத்து நாம் செயல்பட வேண்டும். இலக்கிய அணி நிர்வாகிகள் விழாக்களில் பொன்னாடை போர்த்துவதை தவிர்த்து, புத்தகங்களை வழங்க வேண்டும்.
கொங்கு மண்டலம் என்றாலே அ.தி.மு.க.-விற்கு இனிப்புதான். காரணம் இனிப்பான செய்திகளைத் தருவது கொங்கு மண்டலம் தான். குறிப்பிட்டு சொல்லப் போனால் அதிமுகவின் இதயமே கொங்கு மண்டலம் தான் என்று கூறலாம் என்றார் வைகைச் செல்வன்.












Click it and Unblock the Notifications