அடுத்தடுத்து விபத்து-பாதுகாப்பே இல்லாத திருச்சி-மதுரை ரயில் மார்க்கம்
திண்டுக்கல்: திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து மதுரை வரையிலான ரயில் பாதையில் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்படுவதால் பயணிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
திண்டுக்கல் அருகே நேற்று ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சென்னை-மதுரை இடையிலான சிறப்பு ரயில் பெரும் அபாயத்திலிருந்து தப்பியது.
லால்குடி முதல் நெல்லை, செங்கோட்டை வரையிலான ரயில் பாதைகளில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தில் விரிசல் தான் மிகப் பெரிய அளவிலான பிரச்சினையாக உள்ளது. இதனால் இந்த மார்க்கத்தில், பயணிக்கும் ரயில் பயணிகள் பயந்தபடியே போக நேரிடுகிறது.
சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னை நோக்கி வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில், மீது மின்சார கேபிள் அறுந்து விழுந்ததால் என்ஜின் பழுதடைந்து ரயில் நின்று போனது.
அதேபோல அடிக்கடி தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதும், ரயில் தடம்புரள்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் ரயில்கள் தாமதமாக செல்வதோடு, பயணிகள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி பகுதியில் நேற்று அதிகாலை ரயில்வே ஊழியர்கள் தண்டவாள மேற்பார்வை பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தாமரைப்பாடி ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளம் சுமார் 5 சென்டிமீட்டர் அளவிற்கு விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த சமயத்தில் சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த சிறப்பு ரயில் தாமரைப்பாடியை நெருங்கி் கொண்டிருந்தது. அந்த ரயிலை தாமரைப்பாடி நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த ரயில் தப்பியது. இல்லாவிட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
விரிசலை தற்காலிகமாக சரி செய்துள்ளனர். இதனால் அந்த பாதையில் ரயில்கள் மிகவும் மெதுவாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து விரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதால் மதுரை, நெல்லை மார்க்கத்தில் சமீபத்தில்தான் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் தண்டவாளத்தை ஆய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் அப்பாவி பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.