ஜெயலலலிதாவுக்கு மேலும் 4 மிரட்டல் கடிதங்கள்
வரலாறு காணாத வகையில் என்று கூறும் அளவுக்கு ஒரு முக்கியஅரசியல் தலைவருக்கு இப்படி தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தமிழக அரசியலிலேயே இதுதான் முதல் முறை என்று கூறலாம். அந்த அளவுக்கு தினசரி ஒரு மிரட்டல் கடிதம் ஜெயலலிதாவுக்கு வந்து கொண்டுள்ளது.
இதுவரை 12 மிரட்டல் கடிதங்கள், ஒரு தொலைபேசி மிரட்டல் என வந்துள்ள நிலையில்தற்போது மேலும் நான்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன.
ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு நேற்று மாலை 4 மிரட்டல் கடிதங்களும் வந்தன. வருகிற 18-ந்தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதில் அவர் பங்கேற்றால் உயிருடன் திரும்ப முடியாது என்றும் மிரட்டல் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து ஜேக்கப்
மதுரையில் இருந்து ஜேக்கப் என்பவர் முதல் கடிதத்தை அனுப்பியுள்ளார். மதுரைக்கு வரும் ஜெயலலிதாவை குண்டு வைத்து கொல்வதற்கு தற்கொலை படைகள் முகாமிட்டுள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை ராஜராஜன் நகர் சீலநாயக்கன் தெரு என்ற முகவரியில் இருந்து வீரராஜபாலா என்ற பெயரில் 2-வது மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மதுரைக்கு வந்தால் ஜெயலலிதா உயிரோடு திரும்ப முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுநகரிலிருந்து தாண்டையா தேவர்
விருதுநகர் ஆவடிப்பட்டியில் இருந்து என்.வி. பேரவை, தாண்டையா தேவர் என்ற பெயரில் வந்துள்ள மிரட்டல் கடிதத்தில் ஜெயலலிதாவின் தலைக்கு 55 கோடி ரூபாய் விலை பேசப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பானி தோட்டம் என்ற முகவரியில் இருந்து ராமசாமி என்ற பெயரில் 4-வது கடிதம் வந்துள்ளது. அதில் ஜெயலலிதா மதுரைக்கு செல்வது தற்கொலைக்கு சமம் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த நான்கு கடிதங்களையும் கிண்டி காவல் நிலையத்தில் ஜெயா டிவி நிர்வாகத்தினர் ஒப்படைத்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் வருவதும், இதுகுறித்து இதுவரை காவல்துறை துப்பு துலக்காமல் இருப்பதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்ததாக செய்திகள் கூறின. ஆனால் இதுவரை சிபிஐக்கு மாற்றப்படவில்லை.