20ம் தேதி முதல் திமுக நிர்வாகிகளுடன் கருணாநிதி கலந்துரையாடல்
சென்னை: முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, திமுக நிர்வாகிகளுடன் வருகிற 20ம் தேதி முதல் கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளரான அமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வ கருணாநிதி தலைமையில், பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணை பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, எஸ்.பி.சற்குணபாண்டியன், தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட வாரியாக கலந்தாய்வு கூட்டங்கள் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
வருகிற 20ந் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், 22ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கும், 28 ந் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்டத்திற்கும், மாலை 4 மணிக்கு கோவை மாவட்டத்திற்கும், நவம்பர் 1ந் தேதி காலை 10 மணிக்கு தென் சென்னை மாவட்டத்திற்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும்.
இக்கூட்டங்களில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதிக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
விடுபட்ட மற்ற மாவட்டங்களுக்கான கலந்துரையாடல் கூட்ட நாட்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.