மதிமுக வக்கீலுக்கு அடி உதை-ஆம்னி பஸ் சிறைபிடிப்பு, டிரைவர் கைது
நெல்லை: நெல்லையில் மதிமுக வக்கீல் அடித்து உதைக்கப்பட்டார். ஆம்னி பஸ் சிறை பிடிக்கப்பட்டது.
நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்தவர் வக்கீல் சண்முகசுந்தரம். மதிமுக பிரமுகரான இவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஆம்னி பஸ்சில் நெல்லைக்கு வந்து கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த டிரைவர் அகிலன் பஸ்சை ஓட்டி வந்தார். சிவராஜ் என்பவர் உதவி டிரைவராக இருந்தார். பெங்களூரைத் தாண்டி பஸ் வரும்போது டிரைவர் அகிலன் திடீரென பஸ்சை நிறுத்தி சண்முகசுந்தரம் உள்ளிட்ட சில பயணிகளை அதே கம்பெனிக்கு சொந்தமான மற்றொரு பஸ்சில் செல்லுமாறு கூறினார். இதற்கு சண்முகசுந்தரம் மறுத்தார்.
மேலும் அவர் வோல்வோ பஸ்சில் டிக்கெட் எடுத்து விட்டு சாதாரண பஸ்சில் செல்ல முடியாது எனக் கூறினார். இதனால் டிரைவருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அகிலன், சிவராஜ் ஆகியோர் சண்முகசுந்தரத்தை தாக்கினர்.
இது குறித்து அவர் நெல்லை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் நிஜாமிடம் தெரிவித்தார். இதையடுத்து வக்கீல்கள் அமல்ராஜ், சிவகுமார், மூர்த்தி, அபுதாகீர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் நெல்லை வண்ணார்பேட்டை அருகே நேற்று அதிகாலை சம்பந்தப்பட்ட பஸ்சை வழிமறித்து சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பஸ்சை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு மதிமுக செயலாளர் நிஜாம் உள்ளிட்டோர் திரண்டு வந்து டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையி்ட்டனர்.
மேலும் பெங்களூர் தனியார் பஸ் நிறுவன மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்யூமாறும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் குருநாதன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து டிரைவர் அகிலனை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு பயணிகள் வேண்டுகோளை ஏற்று பஸ் திருவனந்தபுரம் சென்றது.












Click it and Unblock the Notifications